பிளாஸ்டிக் குப்பை மூலம், விமானத்தில்ப் பறப்போம்.
பூமியில் மொத்தத் தண்ணீரில் 97 சதவீதம் கடல் நீராக உள்ளது. இப் பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும் பங்கு வகிக்கின்றது. கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பல நாடுகளின் போக்குவரத்து தேவைகளையும் கடல் மார்க்கமாக நிறைவேற்றுகின்றோம்.
கடல் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, ஒட்சிசன்(O2) என்னும் உயிர் வாயுவையும், முக்கியமான மருந்துகளின் மூலப் பொருட்களையும் வழங்குகின்றது. மற்றும் கால நிலை மாற்றங்களை சீரமைக்கப் பேருதவியாக இப் பெருங்கடல் உள்ளது. அத்துடன் சில சமூகத்தினறிற்கு வாழ்வாதாரங்களாகவும் அமைந்துள்ளது. 1992ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உச்சி மகாநாட்டில் கனடா உலகப் பெருங்கடல் தினம் பற்றி கோரிக்கை வைத்தது.இது அதிகார பூர்வமில்லாமல்தான நடவடிக்கையில் இருந்துவந்தது. 2008ம் ஆண்டு ஐ.நா. அதிகார பூர்வமாக அங்கீகரித்து அறிக்கை விட்டது. அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல்த் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப் பட்டு உலக பெருங்கடல்த் தினம் ஆனி 8ம் திகதி கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றது.
உலகின் சில இடங்களில் கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு குடி நீராகப் பயன்படுத்தப் படுகின்றது. நேரடியாகவும் மறை முகமாகவும் மனிதனுக்கு உதவி புரியும் கடலானது நாம் வாழும் உலகின் நான்கில் மூன்று பகுதியாக அமைந்துள்ளது. ஆனால் இந்தப் பூமியில் வாழும் மனிதனின் தொலை நோக்கற்ற பார்வையால் அதிகமாக மாசு படுத்தப் படுகின்றது. கடலில் கலக்கும் எண்ணெய்க் கசிவு தொழிற்சாலை, குடியிருப்புக்கு கழிவு நீர்கள் கலப்பதால் கடல் நீர் அசுத்தப் படுத்தப் படுகின்றது. இவற்றை விட பிளாஸ்டிக், பொலித்தின் போன்றவை கடலினடியில் சேர்க்கப் படுவதனால் மிகப் பெரிய தீமைகள் ஏற்படுகின்றது. கடல் வாழ் உயிரினங்கள், மீனினங்கள் மட்டுமல்லாமல், பவள பாறைகள், பனிப்பாறைகளும் சேதமடைகின்றன. கடல் வளங்களில் உப்பு, மீனினங்கள் மட்டுமன்றி பவள பாறைகள், பனிப்பாறைகளும் பெரும் பொக்கிஷமாகக் கொண்டாடப் படுகின்றன.
உலகளவில் ஆண்டு தோறும் 1.3 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில்க் கலக்கப் படுகின்றன எனவும், இதனால் ஒரு இலட்சம் கடல் வாழ் உயிரினங்கள் அழிகின்றன எனவும் கருத்துக் கணிப்புக்கு கூறுகிறது. இந்தச் சோகச் செய்திகளோடு இதோ ஒரு நல்ல செய்தி இதுவரை பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்தாலும் மீண்டும் பிளாஸ்டிப் பொருளாகவே உருவாக்கினார்கள்.
ஆனால் வாஷிங்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் அடர்த்தி குறைந்த பொலித்தீன் குப்பையை மறுசுழற்சி செய்து ஜெட் விமானத்திற்கு எரிபொருளாக்கும் தொழிநுட்பத்தை கண்டறிந்து உருவாக்கியுள்ளனர்.
இந்தக் கழிவு மூலம் 85 சதவீத விமான எரிபொருளும் 15 சதவீத டீசலும் பெறப்படுகின்றது. இந்த முறைப்படி 100 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் எரி பொருளாக்கப் படுவதாக விஞ்ஞானிகள் உறுதியாக உள்ளனர். "அப்பிளைட் எனெர்ஜி " என்னும் இதழில் இந்த விஷயம் வெளியிடப்பட்டுள்ளது என்னும் சந்தோசமான செய்தியோடு பிளாஸ்டிக் கழிவுகளிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.