Translate

Saturday 31 August 2019

இருளவுள்ள உலகை,
இறுக்கும் தீ.


உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று எரிகின்றது, அதனுடன் சேர்ந்து சுத்திகரிப்புச் சாலையும் சேர்ந்து எரிகின்றது. இது ஒரு விடுகதை அல்ல, உண்மையான ஒரு சம்பவம். இன்று உலக மக்களிற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு நிகழ்வு உலகின் ஓரிடத்தில் நடக்கின்றது.



பிரேசில் நாட்டில் தன்னுடைய கொடிய செந் நாவை நீட்டி அகட்டி அமேசன் காட்டையே விழுங்கி கொண்டிருக்கும் தீயானது அந்த நாட்டு அரசியல்த் தலைவர்களின் ஆசியுடனேயே பரவத் தொடங்கியது. உலகில் உள்ள மிகப் பெரிய காடு என்று கணிக்கப்பட்ட அமேசான் காட்டில், விலைமதிப்பற்ற மூலிகைச் செடிகள், அரிய வகை உயிரினங்கள், பெரிய சிறிய மரங்கள், பல வகை விலங்குகள் என மனிதனிற்கு வளங்கள் கொடுக்கும் வரமாக உள்ளது.




இந்தக் காட்டுத் தீயால் மேற்குறிப்பிடப்பட்டவை அழியும் நிலையில் உள்ளதோடு மனிதனிற்கு  தீங்கு செய்யும் CO காபன் மொனொட்ஸைட்  வாயுவும் வெளிவிடப்படுகின்றது. இந்த வாயுவை சுவாசித்தால் தலைவலி வாந்தி மயக்கம் என்பன ஏற்படும். அதிகளவு சுவாசிக்க நேர்ந்தால், சுயநினைவற்று மரணிக்கும் நிலை ஏற்பட வாய்ப்பும் உருவாகும்.



உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசன் காடுகள் உலக மக்கள் சுவாசிக்கத் தேவையான உயிர்வாயுவான O2 ஒட்சிசன் வாயுவின் 20 விழுக்காட்டைக் கொடுக்கின்றது. O2ஐ உற்பத்தி செய்வதால் மரங்கள் உற்பத்தித் தொழிற்சாலையாக உள்ளது. அதே நேரம் ஒளித்தொகுப்பு நடப்பதால் CO2 காபன் ஈர் ஓட்ஸைடை உள் எடுத்து O2 ஆக மாற்றுகின்றது. இச் செயற்பாட்டால் வளிமண்டலம் சுத்திகரிக்கப்படுவதால் சுத்திகரிப்பு ஆலையாகவும் மரங்கள் உள்ளது.



அமேசன் காடானது எரிந்து அழியும் பொது O2 உற்பத்தித் தொழிற்சாலையும், வளிமண்டல சுத்திகரிப்புத் தொழிற்சாலையும் எரிகின்றது என்பது கண்கூடு. சகாரா பாலைவனத்தில் பறக்கும் புழுதிமண் அமேசான் காட்டு மரங்களிற்கு உரமாக மாறுகின்றது. அமேசான் காட்டிலிருந்து வெளிவரும் O2 உலக மக்களின் சுவாசத்திற்கு உதவுகின்றது. இன்று இக்காடானது எரிந்து கொண்டிருப்பதனால், வளிமண்டலத்தில் மனிதனிற்கு ஆபத்து விளைவிக்கும் CO காபன் மொனொட்ஸைட் கலந்துகொண்டுள்ளது. இதை வளிமண்டல அகச் சிவப்பு ஒலிக்கருவி (Atmospherie Infrared Sounder ) மூலம் நாசா கண்டுபிடித்து அறிவித்துள்ளது. இந்த வாயு, வளிமண்டலத்தில் நீண்ட தூரத்திற்குச் சென்று காற்றை மாசுபடுத்தி பசுமை இல்ல வாயு மற்றும் பருவ நிலை மாற்றம் என்பன ஏற்படுத்தி சுற்றுச் சூழல் கேடு விளைவிக்கும்.



காற்றிற்கு ஏது வேலி என்பதற்கிணங்க அமேசன் காட்டிலிருந்து O2 ஐ பெற்றுக் கொண்ட உலகம், இன்று CO காபன்மொனொட்ஸைட்டை சுவாசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அமேசான் காட்டை அழிப்பதன் மூலம் பிரேசில் நாட்டில் விவசாய நிலத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்னும் குறுகிய நோக்கமிருந்த போதும், இயற்கை வளமிகுந்த அமேசன் காடு பொதுவுடைமையாகும். பொது நல நோக்கத்தோடு அவாதானித்தால், இந்தத் தீப்பரம்பலால் பெரும் ஆபத்துண்டாகியுள்ளது. G-7 உச்ச மகாநாட்டில் அமேசன் காட்டுத் தீயை அணைக்க 22 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவ்வுதவியைப் பெற பிரேசில் மறுத்துவிட்டது. அதை ஏற்க சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.



நாசா வெளியிட்டுள்ள ஒளிப்படம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாசா வெளியிட்டுள்ள வரைபடத்தில் CO கார்பன்மொனொட்ஸைட்டு அடர்த்தியாக பச்சை நிறத்தில் காணப்படுகின்றது. இந்தக் CO கார்பன்மொனொட்ஸைட்டு கலந்துள்ள மேகங்கள் அமேசன் பகுதியின் வடமேற்குப் பகுதிக்கு பரந்து விரிந்து செல்லுகின்றது. அங்கிருந்து தென்கிழக்கு பகுதியை நோக்கி பரவுகின்றது.



தாயானவள் பிள்ளைக்கு உயிர்கொடுத்தது போல் மரங்கள் மனிதனிற்கு சுவாசிக்க (உயிர்வாழ) O2 தருகின்றது. தாயிற்கு ஒரு கேடு வந்தால் தனயன் வாழாதிருக்கலாமோ? அமேசன் காட்டிற்கு ஏற்பட்ட அழிவை தடுத்து நிறுத்த வேண்டியது மனிதனின் கடமை. உலகத்தின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசன் காட்டை அழிவில் இருந்து பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்? தீயை அணைக்க எம் கைகளால் முடியவில்லையாயினும், இந்தக் கட்டுரையை உங்கள் உறவுகளோடும் நட்புகளோடும் பகிர்ந்து மனித உணர்வுகளைத் தட்டி எழுப்பி தீயை கட்டுப்படுத்தி உலகைக் காக்க உங்களாலும் முடியும். இதோ அந்த அரிய வாய்ப்பு உங்களிற்கு.


எழுத்து,
மங்கை அரசி.

Friday 5 July 2019

காயகல்பம்

காயகல்பம்.

மரணத்திற்கு ஒரு மாற்று மருந்து.


உங்களுக்கு மரணிக்க ஆசையா என்று கேட்டால், ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து ஒரே வார்த்தை ஒலிக்கும், "இல்லை எனக்கு மரணிக்க ஆசை இல்லை இல்லை". இதோ மரணிக்க ஆசை இல்லாதோர் மட்டும் தொடர்ந்து வாசியுங்கள். மரணம் என்பது ஒருவகையான உடலின் ஊனம். அல்லது உடலின் பசி என்று சொல்லலாம். உடல் எப்போதும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்தவண்ணமே உள்ளது. புரியும் படி சொல்லவேண்டும் என்றால். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு தாகம் ஏற்படுகின்றது, பசிக்கின்றது, கழிவகற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது. இதெல்லாம் அத்தியாவசிய செயற்பாடு என்று மனிதன் வகைப்படுத்தியுள்ளான்.



இப்படி அத்தியாவசிய செயற்பாடுகளைச் செய்யாமல் விட்டால், இதற்குப் பதில் உடல் மரணத்தை நாடும். ஆகவே உடல் ஒன்றை எதிர்பார்க்கின்றது அதைக் கொடுக்காவிட்டால் அதற்குப் பதில் மரணத்தை எதிர்பார்க்கின்றது. இதுதான் இலகுவான புரிந்துகொள்ளுதல். அப்படி என்றால் உடல் எதிர்பார்க்கும் உணவைக் கொடுத்தால் எமக்கு மரணம் வராமல் அல்லவா இருக்க வேண்டும்? அப்படி இருக்கையில் தினமும் மூன்றுவேளை உணவுண்ணும் பக்கத்துவீட்டு அண்ணனும் 35 வயதில் அல்பாயுளில் மரணமடைந்த செய்தி தான் என்னை மீண்டும் சிந்திக்க வைத்தது.




அது எப்படி மரணம் என்ற ஒன்று நிகழலாம்? உடலிற்குத் தேவையான ஒன்றைக் கொடுக்கும் போதும் உடல் மரணத்தை நாடும் என்றால் அதில் நியாயம் இல்லையே என்ற யோசனையுடன் நடந்து சென்று கொண்டிருந்த நான் தெருவில் கண்ட ஒரு காட்சி என்னை தெளிவுபடுத்தியது. அதிக எடையோடு தெருவில் சென்ற ஒரு வண்டி கவிழ்ந்து விழுந்து கிடந்தது, அதை பார்த்த அங்கே அதிக எடையோடு வந்த இன்னுமோர் வண்டி, அந்த இடத்திலேயே நின்று அதன் எடையை இன்னுமோர் வண்டியில் இறக்கி வைத்துக் கொண்டிருந்தது. இப்போது எனக்குத் தெளிவு பிறந்தது.



உணவு என்பதால் மரணம் தடைப்படுவது கிடையாது, மரணம் தள்ளிப் போடப் படுகின்றது. மரணம் தடைப்பட வேண்டும் என்றால் மருந்து உண்ணவேண்டும். மருந்து என்றால் என்ன? உணவு என்றால் என்ன?



விருந்து சமைத்து உண்டால் அது உணவு. வீரியம் உள்ளதை அறிந்து அரைத்து உண்டால் அது மருந்து. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், உடல் ஏன் கழிவகற்றுகின்றது? போதுமான உணவைக் கொடுத்தால் எதற்காக உடல் மிகுதியென்று கழிவக்கற்ற வேண்டும்? அதற்க்கு ஒரே காரணம் நாம் தேவைக்கு அதிகமாக வயிற்றை நிரப்பி வைக்கின்றோம் அதனால் உடல் உழைத்துக் களைத்து உயிரை இழக்கின்றது. நாம் உண்ணும் உணவு சிகப்பு இரத்தமாகவும் வெள்ளை இரத்தமாகவும் உடல் முழுதும் சென்று எம்மை இயக்கிக் கொண்டு உள்ளது. சிகப்பு இரத்தம் என்னை உற்சாகமாக வைத்திருக்கவும், வெள்ளை இரத்தம் எம் உடலில் உள்ள தீய கிருமிகளை அழிக்கவும் பயன் படுகின்றது. இந்த இரண்டையும் சீர்படுத்தும் அளவு மருந்து உண்டாலே போதும். உடல் மலம் கழிப்பதை நிறுத்திவிடும். இதனால்த் தான் சித்தர்கள், தியானத்தில் அதிக காலம் அப்படியே அமர்ந்த நிலையில் இருந்திருக்கின்றார்கள்.


இப்போது ஒரு சந்தேகம் வந்திருக்கும் அது எப்படி மருந்துணவைக் கண்டு பிடிப்பது அதில் எப்படி உட்கொள்ளும் அளவைக் கண்டு பிடிப்பது என்று சந்தேகம் வரும். அதற்கு நீங்கள் முதலில் தமிழ் படிக்க வேண்டும், தமிழில் உள்ள பழைய நூல்களைத் தேடிக்  கற்க வேண்டும். இந்த கட்டுரையின் முடிவில் இப்போது உங்களுக்கு ஒரு சில காயகல்ப உணவுகைக் குறிப்பிடுகின்றேன் அதை உட்கொள்ளும் முறையையும் சொல்லுகின்றேன், செய்து பாருங்கள். அறுகம்புல்லு, துளசி, முருங்கையில்லை, நெல்லிக்காய்.


மேலே சொன்ன உணவுப் பொருட்களை தாவரத்தில் இருந்து பறிக்கும் போதே மந்திரங்கள் சொல்லி அல்லது தேவாரங்கள் பாடிப் பறிக்க வேண்டும். அதற்கு காரணம் தாவரத்தில் இருந்து பறிக்கும் போது, தாவரம் அதன் வலியை விஷமாகக் கக்கிவிடாமல் இருக்க மந்திர ஒலிகளை எழுப்பவேண்டும். அதன் பின் பறிக்கப்பட்ட தாவர பகுதிகளை சூரிய நிழலில் காயவைக்கவேண்டும். முக்கிய கவனம் சூரிய ஒளியில் இல்லை, சூரிய நிழலில். அதாவது பகல் வேளையில் ஒரு குடை அல்லது தாள்வாரத்தின் நிழலில் காயவைக்கவேண்டும். காய்ந்து தொட்டால் உதிரும் பக்குவத்தில் அதை எடுத்து நன்றாக சாம்பலாகும் வண்ணம் அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்த துகள்களை உள்ளங்கையில் எடுத்து தேன்குளைத்து அருந்தினால் அது வாய் முதல் வயிறுவரை சென்று வேகமாக குருதியில்க் கலந்து, உடலிற்கு மருந்து வழங்கும். இதன் மூலம் உடல் அதிக சக்தியையும், குறைந்த வேலையையும் பெறும். இதோடு உங்கள் ஆத்மாவையும் ஒன்றிக்க வைத்தால், மரணமின்றி மகிழ்ந்து வாழலாம்.

மரணத்தில் இன்பம் மாற்றுண்டு,

மாற்றன்று மரணமே இன்புற்று!


சிந்தனை சிவவினோபன்.

Monday 10 June 2019

பிளாஸ்டிக் குப்பை மூலம், விமானத்தில்ப் பறப்போம்.

பிளாஸ்டிக் குப்பை மூலம், விமானத்தில்ப் பறப்போம்.


பூமியில் மொத்தத் தண்ணீரில் 97 சதவீதம் கடல் நீராக உள்ளது. இப் பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும் பங்கு வகிக்கின்றது. கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பல நாடுகளின் போக்குவரத்து தேவைகளையும் கடல் மார்க்கமாக நிறைவேற்றுகின்றோம்.



கடல் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, ஒட்சிசன்(O2) என்னும் உயிர் வாயுவையும், முக்கியமான மருந்துகளின் மூலப் பொருட்களையும் வழங்குகின்றது. மற்றும் கால நிலை மாற்றங்களை சீரமைக்கப் பேருதவியாக இப் பெருங்கடல் உள்ளது. அத்துடன் சில சமூகத்தினறிற்கு வாழ்வாதாரங்களாகவும் அமைந்துள்ளது. 1992ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உச்சி மகாநாட்டில் கனடா உலகப் பெருங்கடல் தினம் பற்றி கோரிக்கை வைத்தது.இது அதிகார பூர்வமில்லாமல்தான நடவடிக்கையில் இருந்துவந்தது. 2008ம் ஆண்டு ஐ.நா. அதிகார பூர்வமாக அங்கீகரித்து அறிக்கை விட்டது. அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல்த் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப் பட்டு உலக பெருங்கடல்த் தினம் ஆனி 8ம் திகதி கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றது.



உலகின் சில இடங்களில் கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு குடி நீராகப் பயன்படுத்தப் படுகின்றது. நேரடியாகவும் மறை முகமாகவும் மனிதனுக்கு உதவி புரியும் கடலானது நாம் வாழும் உலகின் நான்கில் மூன்று பகுதியாக அமைந்துள்ளது. ஆனால் இந்தப் பூமியில் வாழும் மனிதனின் தொலை நோக்கற்ற பார்வையால் அதிகமாக மாசு படுத்தப் படுகின்றது. கடலில் கலக்கும் எண்ணெய்க் கசிவு தொழிற்சாலை, குடியிருப்புக்கு கழிவு நீர்கள் கலப்பதால் கடல் நீர் அசுத்தப் படுத்தப் படுகின்றது. இவற்றை விட பிளாஸ்டிக், பொலித்தின் போன்றவை கடலினடியில் சேர்க்கப் படுவதனால் மிகப் பெரிய தீமைகள் ஏற்படுகின்றது. கடல் வாழ் உயிரினங்கள், மீனினங்கள் மட்டுமல்லாமல், பவள பாறைகள், பனிப்பாறைகளும் சேதமடைகின்றன. கடல் வளங்களில் உப்பு, மீனினங்கள் மட்டுமன்றி பவள பாறைகள், பனிப்பாறைகளும் பெரும் பொக்கிஷமாகக் கொண்டாடப் படுகின்றன.



உலகளவில் ஆண்டு தோறும் 1.3 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில்க் கலக்கப் படுகின்றன எனவும், இதனால் ஒரு இலட்சம்  கடல் வாழ் உயிரினங்கள் அழிகின்றன எனவும் கருத்துக் கணிப்புக்கு கூறுகிறது. இந்தச் சோகச் செய்திகளோடு இதோ ஒரு நல்ல செய்தி இதுவரை பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்தாலும் மீண்டும் பிளாஸ்டிப் பொருளாகவே உருவாக்கினார்கள்.



ஆனால் வாஷிங்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் அடர்த்தி குறைந்த பொலித்தீன் குப்பையை மறுசுழற்சி செய்து ஜெட் விமானத்திற்கு எரிபொருளாக்கும் தொழிநுட்பத்தை கண்டறிந்து உருவாக்கியுள்ளனர்.




இந்தக் கழிவு மூலம்  85 சதவீத விமான எரிபொருளும் 15 சதவீத டீசலும் பெறப்படுகின்றது. இந்த முறைப்படி 100 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் எரி பொருளாக்கப் படுவதாக விஞ்ஞானிகள் உறுதியாக உள்ளனர். "அப்பிளைட் எனெர்ஜி " என்னும் இதழில் இந்த விஷயம் வெளியிடப்பட்டுள்ளது என்னும் சந்தோசமான செய்தியோடு பிளாஸ்டிக் கழிவுகளிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

Thursday 30 May 2019

விழி கொடுத்தால், ஒளியேற்றலாம்.

உடலுறுப்புத் தானங்களில் நாம் உயிரோடு இருக்கும் போதே எங்கள் சிறுநீரகம், எலும்பு மச்சை போன்றவற்றைத் தானம் செய்யம் முடியும். இதயம், நுரையீரல், கல்லீரல் போன்றவற்றை இரத்த ஓட்டம் நிகழ்ந்துகொண்டு உள்ள நிலையில்த் தான் தானமாகக் கொடுக்க முடியும். மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து உறுப்புத் தானம் பெறமுடியும். ஆனால் ஒருவர் இறந்த பின்பும் தானம் செய்யக் கூடிய ஒரு உறுப்பு உள்ளது. அது தான கண் என்ற பொன்னான உறுப்பு.


கண் தானம் செய்ய வயது வரம்பு கிடையாது. கண்ணாடி அணிபவர்கள் கூட கண் தானம் செய்யலாம். சர்க்கரை நோயாளிகளோ, இதய நோய், ரத்தக் கொதிப்பு நோயாளிகள், கண்புரை அறுவைசிகிச்சை செய்தோர் என்று அவர்களும் கண்தானம் செய்யலாம். இயற்கையாக மரணமெய்தியோர், மற்றும் விபத்தில் இறந்தவர்களிடமிருந்தும் கண்தானம் பெறலாம். வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ இறந்தாலும், அங்கு சென்று கண்தானம் பெற்றுக் கொள்வார்கள்.

அனால் HIV, மூளைக்கு காய்ச்சல், நாய்க்கடி நோய்க்காளானவர்களிடமிருந்து கண்தானம் பெறமாட்டார்கள். அத்துடன் போதைப் பொருள் பாவனையாளர், விஷத்தால் இறந்தவர், புற்றுநோயால்ப் பாதிக்கப்பட்டவரிடமிருந்தும் கண்தானம் பெறப்படமாட்டது. அதனாலேயே இறந்தவருக்கு முழு பரிசோதனை செய்து மருத்துவரிடம் முழுமையாக விசாரித்தே அந்தக் கண்ணை அறுவைசிகிச்சை செய்து எடுப்பார்கள். அதுவும் ஒருவர் இறந்து ஆறுமணிநேரத்துள் நடக்க வேண்டும்.
கண்தானம் செய்பவர் மரணமடைந்து ஆறு மணி நேரத்துள் கண் அகற்றப்பட்டு குளிரூட்டப்பட்ட சாதனத்துள் வைத்து கண் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு கண் வங்கியில் கண் பரிசோதனை செய்யப்பட்டு ஒன்று முதல் நான்கு வகையாகப் பிரித்து வைக்கப் படும்.

கன்மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு, ஏற்கனவே வங்கியில்ப் பதிவு செய்து வைக்கப்பட்டவருக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அவசர நோயாளிகட்கும் முன்னுரிமை வழங்கப் படும். அவ்வாறு கண்ணறுவை சிகிச்சை செய்பவர்களுடைய கருவிழிகளில் ஆறு அடுக்குகள் காணப்படுகின்றது. ஒரு கருவிழியை, வெவ்வேறு பிரச்சினையால்ப் பாதிக்கப்பட்ட நால்வருக்குப் பகிர்ந்தளிக்கும் வகையில் விஞ்ஞானம் இன்று விரிந்து வளர்ந்து காணப்படுகின்றது.
கண்மாற்று அறுவை சிகிச்சையின் பொது கருவிழி மட்டுமே கண்ணில் இருந்து எடுத்த நோயாளிக்குப் பொருத்தப்படுகின்றது. ஆனால் உயிரோடு இருக்கும் ஒருவரிடமிருந்து ஒருபோதும் கண் தானம் எடுக்க முடியாது. நாம் கண்தானம் செய்ய விரும்பினால் உரிய படிவத்தை நிரப்பி கண் வங்கியில்க் கொடுக்க வேண்டும். அதன் நகலை நாம் எம்மோடு வைத்துக் கொள்ளவேண்டும். அத்தோடு நம் இரத்த உறவுகளிற்கு தெரிவித்திருக்க வேண்டும். திடீர் மரணம் நிகழ்ந்தால் உடனடியாக கண்வங்கிக்கு அறிவிக்கும்படி முன்பே, சொல்லி வைக்க வேண்டும். ஏன் என்றால் ஆறுமணித்தியாலத்துள் கருவிழி உடலை விட்டு பாதுகாப்பாக எடுக்க வேண்டும் என்பதால்.
உலகின் முதல் வெற்றிகரமான கண் அறுவை சிகிச்சை 1905இல் தான் நடைபெற்றது. ஆனால் இந்த உலகமே அறியாத வரலாற்று உண்மை உலகின் முதலாவது கண்தானம் செய்தது ஒரு தமிழன். அது வேறுயாருமில்லை, கண்ணப்ப நாயனார். யார் கண்ணப்ப நாயனார் என்று தெரிந்தவர்கள் புரிந்துகொள்ளுங்கள். தெரியாதவர்கள் முதியோர் இல்லத்தில் உள்ள தாத்தா பாட்டியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

Wednesday 22 May 2019

வெய்யில் காலத்தில் உடல்நலம் காப்போம்.

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது, வெயில் உச்சத்திற்குச் செல்லப் போகின்றது, செல்ஸியஸ் டிகிரிக்கு கணக்கில் உயர போகின்றது, காற்று கூட வீச மறுக்கும், சிலவேளைகளில் அனல்க் காற்று வீசலாம்.

மக்கள் இவற்றில் இருந்து தப்புவதற்காக குளிர் நிலங்களை நாடி ஓட ஆரம்பிக்கின்றனர். சம்மர் லீவு எடுத்த மக்கள் தம்மை ஆசுவாசப் படுத்துவதற்காக இடம் விட்டு இடம் நாடு விட்டு நாடாகச் சென்று வருகிறானர்.

பகல் நேரப் பயணங்கள் மனிதனை பரிதவிக்க வைக்க போகின்றன, இந்நிலையில் ஐஸ் வாட்டர் மீது விருப்பம் தூண்டப படுவது இயல்புதான். பிரிச்சில் வைத்த குளிர்நீரை எடுத்து மடக்கு மடக்கு என்று குடிக்கத் தோன்றும்.

ஆனால் அது சரியான செயல்தானா? மருத்துவர்கள் என்ன கூறுகின்றார்கள்? வெயிலில் களைத்து வீடுவாரும் மனிதன் உடனடியாக குளிர் நீரைக் குடித்தால், திடீர் வெப்பநிலை மாற்றத்தால் உடலில் உள்ள சிறு ரத்தக் குழாய்கள் வெடித்துவிடுமாம். குளிர்நீரை குடிப்பது மட்டுமல்ல, குளிநீரில் குதி காலை நனைத்தாலக் கூட பாதிப்பு ஏற்படத் தான் செய்யும்.

வெளியில் வெயில் உச்சத்தில் இருக்கும்போது வெயில் பட்ட உடலும் சூழல் வெப்பநிலையோடு சேர்ந்து உஷ்ணமாகிவிடும். அவ்வாறு உஷ்ணநிலையில் இருக்கும் உடலின் வெளிப்புறமோ உட்புறமோ உடனடியா குளிர்வடையாக் கூடாது. காரணம் அவ்வாறு உடல் விரையாகக் குளிர்வடையும் நேரத்தில் வெளிப்புற சூழ்நிலை இப்போது வெப்பமாகவே இருக்கும், அதன் காரணத்தால் உடல் மீண்டும் தன்னை குளிர்வாக வைத்திருக்க முயலும், ஆனால் குளிர் நீரால் ஏற்கனவே குளிர்ந்துள்ள உடலை மீண்டும் குளிர்வடைய வைக்க முயலும் உடல் தொடர்ச்சியாக தோல்வியுறுவதால், விரைவாகச் சோர்வடையும். வேண்டும் என்றால் குளிர் நீர் குடித்தவுடன் பாருங்கள் உங்களை அறியாமல் ஒரு சோர்வு ஏற்படும். இது ஆரோக்கியம் அற்ற இரத்த நாளங்களை உருவாக்கி உடலை பலவீனமாகும். ஒரு கடத்தில் ரத்த நாளங்களை வெடிக்கவும் வைக்கும் அது நடந்தால் உயிருக்கு கூட பாதிப்பு ஏற்படலாம்.

எப்படி இந்தத் தருணத்தை சமாளிப்பது என்றால், முதலில் காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து உடலை அமைதி படுத்த வேண்டும் இது உடலின் வெப்பநிலையை நேர்த்தியாகக் குறைக்கும். அதன் பின் உடல் அறைவெப்பநிலை அடையும் நேரத்தில் சாதாரண குடிநீரை குடிப்பதே சாலச் சிறந்த தீர்வாகும்.

ஆதலால் குளிர் தண்ணீரைத் தடுப்போம்,
குடிதண்ணீரைக் குடிப்போம்,
உடல்நலத்தைக் காப்போம்.

எழுத்து
மங்கை அரசி.

Tuesday 21 May 2019

விண்கல்லில் இருந்து விழுந்த மழை.

இன்றும் எம் உலகில் எத்தனையோ விண்கற்கள் விழுந்தவண்ணமே உள்ளது. கண்மூடி உறங்கும் இரவில் சற்று இரவை உற்றுப் பார்த்தால் வானில் ஏதோ ஒன்று உலகை நோக்கி ஒளிர்ந்து கொண்டே வந்து மறைந்து போவதை பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா? அப்படி உண்டென்றால் நீங்கள் பார்த்தது எரிகல். அவ்வாறு வந்த அந்த எரிகல்தான் விண்கல். விண்ணில் எண்ணற்ற கற்கள் இன்றும் இயக்கப் பாதை இன்றி உலாவிக்கொண்டுள்ளன. அவை பூமியின் இயக்கப்பாதைக்குள் வந்தால், பூமி அதை தன்னைநோக்கி இழுக்க ஆரம்பிக்கும். அப்போது பூமியை நோக்கி வரும் விண்கல் பூமியின் வளிமண்டலத் துணிக்கைகளுடன் மோதி எரிய ஆரம்பிக்கும். அவ்வாறு எரியும் கற்களில் பல பூமியை அடையமுன்னமே எரிந்து சாம்பலாகிவிடுகின்றன. அவ்வாறு முழுமையாக எரியாமல் பூமியில் வந்து விழுந்தால் அதுவே விண்கல் என்று சொல்லப்படுகின்றது. இது பூமியில் வந்து விழுகின்றது என்று சொல்வதை விட பூமியோடு மோதுகின்றது என்றே சொல்லவேண்டும். இவ்வாறு மோதியே பூமியில் டைனோசர் அழிந்தது என்று சொல்வார்கள். ஆனால் நாம் பார்க்க இருக்கும் கதை அதையும்விட பழமைவாய்ந்த கதை. பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே பல விண்கற்கள் பூமியைத் தாக்கியதாகச் சொல்லுகின்றனர். பூமிக்கு வந்த இந்த விண்கற்கள் தான் மலையாகவும் அதே நேரம் பெரும் பள்ளத்தாக்கையும் ஏற்படுத்தியுள்ளன என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். அதைவிட பெரும் உண்மை என்னவென்றால் நாம் இன்று பாவிக்கும் இரும்பு இந்த உலகைச் சேர்ந்ததே இல்லையாம். விண்ணில் உள்ள விண்கற்களில் அதிகம் உள்ளது இரும்புதானாம். பல விண்கற்கள் வீழ்ந்துதான் மண்ணில் இரும்பு கலந்தது என்றும் விஞ்ஞானிகள் அறிக்கை பதிந்துள்ளனர். இரும்பின் கதையை விட ஆச்சரியமான இன்னுமொரு விடயம் உள்ளது. நாம் பருகும் அத்தியாவசிய பொருளாகிய தண்ணீரே விண்ணில் இருந்து வந்த விண்கல் மூலமாகத் தான் பூமிக்கு வந்துள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானிய விண்கலமான "ஹயபுச" 2010 ஆம் ஆண்டில் "இடோகர்" என்று பெயர் சூட்டப்பட்ட விண்கல்லின் மாதிரிகளை பூமிக்கு அனுப்ப, அதை ஆராய்ந்த அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் அந்த விண்கல்லில் நீர் மூலக்குறுகள் இருந்துள்ளதை பார்த்து ஆச்சர்யப்பட்டு உறுதியும் செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து விஞ்ஞானிகளில் மேற்கொண்ட ஆராய்வில் பலகோடி ஆண்டுகளிற்கு முன் ஒரு வால்நட்சத்திரம் பூமியில் மோதியிருப்பதாகவும் அதன் வால்பகுதியில் இருந்த நீர்மூலக்கூறுகள் உலகை சூழ்ந்துகொண்டது என்றும். சூரியனின் வெப்பத்தில் பூமியின் மத்தியில் உள்ள நீர் அனைத்தும் ஆவியாக காற்றுருவாக்கியதாகவும், விஞ்ஞானிகள் ஆய்வைப் பூர்த்திசெய்துள்ளனர். இன்று பலகோடி ஆண்டுகளின் பின் மிருகங்கள் பறவைகள் மனிதர்கள் என்று இந்த உலகம் இப்படி இருக்க ஒரே ஒரு காரணம் அந்த வால்நட்சத்திரத்தின் மோதல் தான். அதனால்த் தான் நாம் இன்றும் ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுக்காமல் மோதிக் கொண்டே இருக்கின்றோமோ என்னவோ?