Translate

Tuesday 21 May 2019

விண்கல்லில் இருந்து விழுந்த மழை.

இன்றும் எம் உலகில் எத்தனையோ விண்கற்கள் விழுந்தவண்ணமே உள்ளது. கண்மூடி உறங்கும் இரவில் சற்று இரவை உற்றுப் பார்த்தால் வானில் ஏதோ ஒன்று உலகை நோக்கி ஒளிர்ந்து கொண்டே வந்து மறைந்து போவதை பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா? அப்படி உண்டென்றால் நீங்கள் பார்த்தது எரிகல். அவ்வாறு வந்த அந்த எரிகல்தான் விண்கல். விண்ணில் எண்ணற்ற கற்கள் இன்றும் இயக்கப் பாதை இன்றி உலாவிக்கொண்டுள்ளன. அவை பூமியின் இயக்கப்பாதைக்குள் வந்தால், பூமி அதை தன்னைநோக்கி இழுக்க ஆரம்பிக்கும். அப்போது பூமியை நோக்கி வரும் விண்கல் பூமியின் வளிமண்டலத் துணிக்கைகளுடன் மோதி எரிய ஆரம்பிக்கும். அவ்வாறு எரியும் கற்களில் பல பூமியை அடையமுன்னமே எரிந்து சாம்பலாகிவிடுகின்றன. அவ்வாறு முழுமையாக எரியாமல் பூமியில் வந்து விழுந்தால் அதுவே விண்கல் என்று சொல்லப்படுகின்றது. இது பூமியில் வந்து விழுகின்றது என்று சொல்வதை விட பூமியோடு மோதுகின்றது என்றே சொல்லவேண்டும். இவ்வாறு மோதியே பூமியில் டைனோசர் அழிந்தது என்று சொல்வார்கள். ஆனால் நாம் பார்க்க இருக்கும் கதை அதையும்விட பழமைவாய்ந்த கதை. பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே பல விண்கற்கள் பூமியைத் தாக்கியதாகச் சொல்லுகின்றனர். பூமிக்கு வந்த இந்த விண்கற்கள் தான் மலையாகவும் அதே நேரம் பெரும் பள்ளத்தாக்கையும் ஏற்படுத்தியுள்ளன என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். அதைவிட பெரும் உண்மை என்னவென்றால் நாம் இன்று பாவிக்கும் இரும்பு இந்த உலகைச் சேர்ந்ததே இல்லையாம். விண்ணில் உள்ள விண்கற்களில் அதிகம் உள்ளது இரும்புதானாம். பல விண்கற்கள் வீழ்ந்துதான் மண்ணில் இரும்பு கலந்தது என்றும் விஞ்ஞானிகள் அறிக்கை பதிந்துள்ளனர். இரும்பின் கதையை விட ஆச்சரியமான இன்னுமொரு விடயம் உள்ளது. நாம் பருகும் அத்தியாவசிய பொருளாகிய தண்ணீரே விண்ணில் இருந்து வந்த விண்கல் மூலமாகத் தான் பூமிக்கு வந்துள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானிய விண்கலமான "ஹயபுச" 2010 ஆம் ஆண்டில் "இடோகர்" என்று பெயர் சூட்டப்பட்ட விண்கல்லின் மாதிரிகளை பூமிக்கு அனுப்ப, அதை ஆராய்ந்த அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் அந்த விண்கல்லில் நீர் மூலக்குறுகள் இருந்துள்ளதை பார்த்து ஆச்சர்யப்பட்டு உறுதியும் செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து விஞ்ஞானிகளில் மேற்கொண்ட ஆராய்வில் பலகோடி ஆண்டுகளிற்கு முன் ஒரு வால்நட்சத்திரம் பூமியில் மோதியிருப்பதாகவும் அதன் வால்பகுதியில் இருந்த நீர்மூலக்கூறுகள் உலகை சூழ்ந்துகொண்டது என்றும். சூரியனின் வெப்பத்தில் பூமியின் மத்தியில் உள்ள நீர் அனைத்தும் ஆவியாக காற்றுருவாக்கியதாகவும், விஞ்ஞானிகள் ஆய்வைப் பூர்த்திசெய்துள்ளனர். இன்று பலகோடி ஆண்டுகளின் பின் மிருகங்கள் பறவைகள் மனிதர்கள் என்று இந்த உலகம் இப்படி இருக்க ஒரே ஒரு காரணம் அந்த வால்நட்சத்திரத்தின் மோதல் தான். அதனால்த் தான் நாம் இன்றும் ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுக்காமல் மோதிக் கொண்டே இருக்கின்றோமோ என்னவோ?

No comments:

Post a Comment